Thursday, February 12, 2026

 

9. குர்ஆன் & ஹதீஸ்:  சூரா இஃக்லாஸ் பற்றிய ஹதீஸ்கள்:


السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

சூரா அல்-இஃக்லாஸ் (அத்தியாயம் 112) இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்தாகும். அல்லாஹ்வின் ஏகத்துவத்தை  அதாவது ஓரிறைக் கொள்கை யை (தவ்ஹீத்) மற்றும் அவனின் தனித்துவத்தை வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் வம்சாவளி:

உபை இப்னு கஅப் அறிவித்தார்: மக்காவின் இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “உங்கள் இறைவனின் வம்சாவளியை எங்களுக்குச் கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் நான்கு வசனங்கள் கொண்ட சூரா இஃக்லாஸை இறக்கி யருளினான், “சொல்லுங்கள்: அவன் அல்லாஹ், ஒருவன், அல்லாஹ் எவரிடத்தும் தேவை யற்றவன்." (112:1-2) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3). அவனுக்கு நிகரானவர் எவரும் இல்லை. [112:4]. இது அல்லாஹ்வின் பண்புகளை கோடிட்டுக் காட்டும் நேரடி விளக்கம். [சுனன் அல்-திர்மிதி, 3364]

இச்சூரா குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதி:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், "ஒன்று கூடுங்கள்! நான் உங்களுக்குக் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிக் காட்டப்போகிறேன்" என்று கூறினார்கள். அவ்வாறே (மக்கள்) ஒன்று கூடினர். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, சூரா இஃக்லாஸ் '{குல் ஹுவல்லாஹு அஹத்}' (அல்லாஹ் ஒருவன் என்று கூறுவீராக!) என்று ஓதினார்கள். பிறகு (வீட்டிற்குள்) சென்று விட்டார்கள். ஆகவே எங்களில் சிலர் மற்றவர்களிடம், "வானத்திலிருந்து அவர்களுக்கு ஏதேனும் செய்தி (வஹி) வந்திருக்க வேண்டும்; அதுதான் அவர்களை உள்ளே செல்ல வைத்துவிட்டது என்று நான் கருதுகிறேன்" என்று பேசிக்கொண்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) வெளியே வந்து, "நான் உங்களுக்குக் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிக் காட்டுவதாகக் கூறினேன் (அல்லவா?) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானதாகும்" என்று கூறினார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் : 812 a]

எல்லாவற்றின் பாதுகாப்பிற்கு ஓதுதல்:

அப்துல்லாஹ் பின் குபைப் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நாங்கள் மழை பெய்து கொண்டிருந்த, கடும் இருளான ஓர் இரவில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவதற்காக அவர்களைத் தேடிச் சென்றோம். நான் அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘கூறுவீராக’ என்றார்கள். நான் எதுவும் கூறவில்லை. பிறகு அவர்கள், ‘கூறுவீராக’ என்றார்கள். நான் எதுவும் கூறவில்லை. அவர்கள், ‘கூறுவீராக’ என்றார்கள். நான், ‘நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மாலையிலும் காலையிலும் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ மற்றும் அல்-முஅவ்வித்ததைன் (அல்-ஃபலக் மற்றும் அன்-நாஸ் அத்தியாயங்கள்) ஆகியவற்றை மூன்று முறை ஓதுவீராக. அவை எல்லாவற்றிலிருந்தும் உமக்குப் போதுமானதாக இருக்கும்’ என்று கூறினார்கள்.” [ஜாமிஉத் திர்மிதீ : 3575]

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவும் தமது படுக்கைக்குச் செல்லும் போது, தம் இரு உள்ளங்கை களையும் இணைத்து அவற்றில் (லேசாக) ஊதுவார்கள். பிறகு அவற்றில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்' மற்றும் 'குல் அஊது பிரப்பின் னாஸ்' ஆகியவற்றை ஓதுவார்கள். பிறகு அவ்விரண் டாலும் தம் உடலிலிருந்து இயன்ற வரை தடவுவார்கள். தம் தலை, முகம் மற்றும் தம் உடலின் முன்பகுதியிலிருந்து ஆரம்பிப்பார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். [ஸஹீஹுல் புகாரி : 5017].

இதை அடிக்கடி ஓதும் போது சுவர்க்கம் நிச்சயம்:

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர், 'குல் ஹுவ அல்லாஹு அஹத், அல்லாஹுஸ்-ஸமத்' என்று ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அது உறுதியாகிவிட்டது (அவருக்கு)' என்று கூறினார்கள். நான், 'எது உறுதியாகிவிட்டது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'சொர்க்கம்' என்று கூறினார்கள். [ஜாமிஉத் திர்மிதீ, 2897]

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் பத்து முறை 'அவன் அல்லாஹ், ஏகத்துவமானவன்' என்று கூறுகிறாரோ, அவருக்காக சொர்க்கத்தில் ஒரு அரண்மனை கட்டப்படும். [அல்-மு’ஜம் அல்-அவ்ஸத்தில்-தபரானி 281 ஸஹீஹ் (உண்மையானது)அல்-அல்பானி படி]

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒவ்வொரு நாளும் இருநூறு முறை 'குல் ஹுவல்லாஹு அஹத்' (அத்தியாயம் இக்லாஸ்) ஓதுகிறாரோ, அவருக்குக் கடன் இருந்தாலன்றி (அதாவது, மனிதர்களுக்குச் செலுத்த வேண்டிய கடன்கள் இருந்தால் அவை மன்னிக்கப்படாது), அவருடைய ஐம்பது வருடப் பாவங்கள் அழிக்கப்படும்." மேலும் இதே அறிவிப்பாளர் தொடரில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் தனது படுக்கையில் உறங்க நாடி, தனது வலது பக்கத்தின் மீது படுத்து, பின்னர் நூறு முறை 'குல் ஹுவல்லாஹு அஹத்' (அத்தியாயம் இக்லாஸ்) ஓதுகிறாரோ, மறுமை நாள் வரும்போது இறைவன் அவரிடம், 'என் அடியாரே! உன் வலது புறமாகச் சொர்க்கத்தில் நுழைவாயாக' என்று கூறுவான்." [ஜாமிஉத் திர்மிதீ, 2898]

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: குபா பள்ளி வாசலில் அன்சாரிகளில் ஒருவர் அவர்களுக்குத் (தொழுகையில்) தலைமை தாங்கித் தொழுவித்து வந்தார். அவர் தொழுகையில் அவர்களுக்காக (குர்ஆனில்) ஒரு சூராவை ஓதத் துவங்கும் போதெல்லாம், (முதலில்) 'குல் ஹுவல்லாஹு அஹத்' சூராவை ஓதி முடித்துவிட்டு, அதனுடன் (தான் ஓத விரும்பிய) மற்றொரு சூராவையும் ஓதுவார். அவர் ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறே செய்து வந்தார். அவருடைய தோழர்கள் அவரிடம் பேசி, "நிச்சயமாக நீர் இந்த சூராவை ஓதுகிறீர்; பிறகு மற்றொரு சூராவை ஓதாதவரை அதுவே உமக்குப் போதுமானது என்று நீர் கருதுவதில்லை. எனவே, நீர் இதை (மட்டும்) ஓத வேண்டும், அல்லது இதை விட்டுவிட்டு வேறொரு சூராவை ஓத வேண்டும்" என்று கூறினார்கள். அதற்கு அவர், "நான் அதை விடுவதாக இல்லை. நான் இதைக் கொண்டு உங்களுக்குத் தலைமை தாங்குவதை நீங்கள் விரும்பினால் (அவ்வாறு) செய்வேன். நீங்கள் அதை வெறுத்தால் நான் உங்களை விட்டு விலகிக்கொள்கிறேன்" என்று கூறினார். அவர்களோ அவரைத் தங்களில் சிறந்தவராகக் கருதினார்கள்; வேறொருவர் தங்களுக்குத் தலைமை தாங்குவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் வந்தபோது, நடந்த செய்தியை அவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இன்னாரே! உமது தோழர்கள் உமக்குக் கட்டளையிடு வதைச் செய்வதிலிருந்து உம்மைத் தடுப்பது எது? ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த சூராவை ஓதும்படி உம்மைத் தூண்டுவது எது?" என்று கேட்டார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நான் அதை நேசிக்கிறேன்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அதன் மீதான உமது அன்பு உம்மைச் சொர்க்கத்தில் புகுத்தியது" என்று கூறினார்கள். [ஜாமிஉத் திர்மிதீ: 2901; ஸஹீஹ் புகாரி: 774b]

அல்லாஹ்வின்  மிக மகத்தான பெயரைக் கொண்ட சூரா:

புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் (இவ்வாறு) பிரார்த்தனை செய்வதைக் கேட்டார்கள். அவர் கூறிக்கொண்டிருந்தார்: யா அல்லாஹ்! நிச்சயமாக நீயே அல்லாஹ் என்றும், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை என்றும், நீ ஒருவன் (அல்-அஹத்), தேவையற்றவன் (அஸ்-ஸமத்) என்றும், நீ யாரையும் பெற்றெடுக்கவுமில்லை, யாராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை என்றும், உனக்கு நிகராக யாரும் இல்லை என்றும் நான் சாட்சி கூறுவதன் மூலம் உன்னிடம் கேட்கிறேன்.’) அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர் அல்லாஹ்விடம் அவனது மிக மகத்தான பெயரைக் (இஸ்முல் அஃலம்) கொண்டு கேட்டுள்ளார். அந்தப் பெயரைக் கொண்டு அவனிடம் அழைக்கப்பட்டால் அவன் பதிலளிக்கிறான்; அதைக் கொண்டு அவனிடம் கேட்கப்பட்டால் அவன் கொடுக்கிறான்.” (ஜாமிஉத் திர்மிதீ : 3475)

தினமும் ஓதும் சுன்னத்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்; மேலும் அவர்கள் கூறுவார்கள்: ‘ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களில் ஓதுவதற்குச் சிறந்த இரண்டு சூராக்கள்: {குல் ஹுவல்லாஹு அஹத்) மற்றும் {குல் யா அய்யுஹல் காஃபிரூன்}’.” [சுனன் இப்னுமாஜா:1150]

உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகையில் (மூன்று ரக்அத்துகள் தொழுதால், முதல் ரக்அத்தில்) ‘சப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா’வையும், (இரண்டாம் ரக்அத்தில்) ‘குல் யா அய்யுஹல் காஃபிரூன்’வையும் மற்றும் (மூன்றாம் ரக்அத்தில்) ‘குல் ஹுவல்லாஹு அஹத்’தையும் ஓதுவார்கள்.” [சுனன் இப்னுமாஜா : 1171]

الحمدلله

No comments:

Post a Comment

  9. குர்ஆன் & ஹதீஸ் :   சூரா இஃக்லாஸ் பற்றிய ஹதீஸ்கள்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ சூர...